அவ்லியாக்களின் சிறப்புகள்
பீ. ஜைனுல் ஆபிதீன்.
புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)
ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.





