Thursday, July 21, 2011


அவ்லியாக்களின் சிறப்புகள்



பீ. ஜைனுல் ஆபிதீன்.

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.
இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
நிர்வாணச் சாமியார்.
அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.
அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.
அஷ்ஷைகு இப்ராஹீம்.
அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில்,இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!)

இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம். இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூட இவர் தான் முன்மாதிரியாக இருக்கக் கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.)
இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன.
இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.
(குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.)
அபூ கவ்தா.
அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ,பருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)
குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?
ஸய்யித் அஹ்மத் அல்பதவீ.
எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத்தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, சரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன்.
நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத்தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித்தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.
(தபகாத், பதவீயின் வரலாறு)
குறிப்பு: கப்ரிலிருந்து வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒருபுறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!
இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி,கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!
ஸய்யித் அல் அஜமீ.
இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்...?
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)
குறிப்பு: யானைக்கும், கழுதைக்கும் கப்ரு கட்டியுள்ளவர்களே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.
நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)
குறிப்பு: கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா.
நான் நபி (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.
(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)
குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.
நபி (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.
ஷஃபான் அல் மஜ்தூப்.
இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை... என்று துஆச் செய்தார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்கும் பெயர் இறைநேசராம்!

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.
இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.
இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.
நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger