அந்நியருக்கு மத்தியிலும்அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம்
மவ்லவி ஹபீல் (ஸலபி)
இன்று, பல்வேறு கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. அவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தான் அதிகளவு பிரசாரம் செய்துவருகின்றன. நம் நாட்டில் இஸ்லாத்தின் வாடையை நுகராது, ஏகத்துவக் கொள்கையின் இன்பத்தை உணராது, நரகத்தின் விளிம்பில் நிற்கும் முஸ்லிமல்லாத மக்களைப் பற்றி பெரிதாக அவை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதனால், அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் மோசமான சில நடவடிக்கைகளினால் அவர்களிற் சிலர் இஸ்லாத்தையே வெறுக்கின்றனர். இதனால், நமக்கும் அவர்களுக்குமிடையே பகைமை உணர்வு படர ஆரம்பித்துள்ளது. இந்தக் கசப்புணர்வைக் களைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது.
இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும், ஆன்மீக தகிடுதத்தங்களுக்கும், மதவாதிகளின் சுரண்டல்களுக்கும் உட்பட்டு, ஏமாற்றமடைந்துள்ள இவர்களின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகத் திகழும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை நாம் வழங்க முனைய வேண்டும்.





