இஸ்லாமிய ஆட்ச்சிதான் முஸ்லிம்களின் இலட்சிசியமா?

Friday, November 2, 2012


கிலாஃபத் - உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கருத்து தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தையுடையவர்களின் வாதங்கள்: கிலாஃபத் என்பது இல்லாமல் இஸ்லாம் என்பதே இல்லை. இந்த இலக்கைக் கொண்டு தான் நுபுவ்வத் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்றதும் இதற்காகத் தான். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். அப்போது தான் மது விலக்கு போன்ற கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிந்தது.
எனவே இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இஸ்லாம் முழுமையாக நடைமுறைக்கு வராது. எதிர்காலத்தில் மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றும் போது இஸ்லாமிய ஆட்சிக்காக பைஅத் செய்ய வேண்டும். அந்த கிலாஃபத்தை உருவாக்க இப்போதே முயற்சி செய்வது நமது கடமையாகும். மஹ்தீ தொடர்பான நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும், 24:55 வசனமும் கிலாஃபத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இவ்வாறு இவர்கள் வாதிடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் செய்பவர்களிடம் பைஅத் பெறும் முறை உள்ளது. இது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏகத்துவத்தில் கேள்வி பதில் பகுதியிலோ அல்லது தனிக் கட்டுரையாகவோ விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


 இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் - நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும். இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள். மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 2:246, 247 நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள். அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன் என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர் என்றார். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:55 எனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது. என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை. அல்குர்ஆன் 21:25 எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை. அல்குர்ஆன் 5:99 தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா? அல்குர்ஆன் 16:35 இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது; இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இவ்வளவு தெளிவாகத் திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21 நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி 3612, 3852 நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். அல்குர்ஆன் 24:55 இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்பதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் பெறப் போகும் வெற்றி குறித்து அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் போருக்கு அழைக்கும் போது நயவஞ்சகர்கள் புறக்கணிப்பது பற்றிய செய்தியைக் கூறி விட்டு, அதன் பிறகு தான் மேற்கண்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும். (முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. அல்குர்ஆன் 24:53, 54 24:55 வசனத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று ஒரு வாதத்திற்குக் கூறினாலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள எந்தச் சான்றும் இதில் இல்லை. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்குப் பூமியில் அதிகாரம் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியை இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று மேற்கண்ட வசனம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை. மேலே எடுத்துக் காட்டியுள்ள புகாரி 3612 ஹதீஸ் இதைத் தான் கூறுகின்றது. எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம். சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்? இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது. மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றுவார்கள், இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்று முன்னறிவிப்புக்கள் இருப்பது உண்மை தான். ஆனால் மஹ்தீ (அலை) அவர்கள் தான் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் உருவாக்கி வைத்த அடித்தளத்தில் தான் மஹ்தீ (அலை) அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என்று கூறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டமாகும். இந்த வாதத்தை முன் வைக்கும் கூட்டத்தினர் பைஅத் பெறுவதை வலியுறுத்துகின்றனர். பைஅத் எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் இந்த பைஅத்திற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். அல்குர்ஆன் 48:10 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிலிரிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம். இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12) இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான். இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அரிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை. இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள். எனவே நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவு படுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும். நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம். ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது, உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இதற்கு அனுமதி உண்டு. இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள். இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர் களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும். எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும். வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger